Saturday, April 15, 2006

பொருள் தேடும் வாழ்க்கையில்...

பெங்களூரை விட்டு சிக்காகோ வந்து ஒரு வருடம் ஆகி விட்டது. பெங்களூர் டிராப்பிக்கில் புகையை நுகர்ந்து, அந்த ரசாயன கரியை முகத்தில் பூசிக்கொண்டும் அலுவலகத்துக்கு செல்லும் பிரச்சனை இல்லை. காதலியின் அருகாமையை நினைவுபடுவதை போன்ற வசந்தகாலத்தின் இளமை அழகு, ரம்மியமான குளிர். தூசி, புகையில்லை. அறையின் ஜன்னலின் இருந்து வெளியே பார்த்தால் மிக எழிலாக, நாள் முழுவதும் பார்த்துகொண்டே இருந்தாலும் அலுக்காத மரம் செடிகள், அதனூடே தத்தி தத்தி நடை பழகும் வாத்துகூட்டம். நான் பெரிதும் மதிக்கும் பெர்சனல் ப்ரிடம், ஸ்பேஸ் இங்கு நிறைய இருக்கிறது. எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் மனதில் தான் ஏதோ வெறுமையான உணர்வு. மதுரையின் வேர்வை கசகசப்பில் இருந்த ஆனந்தம் இங்கு இல்லாதது போன்ற பிரமை. ஞாயிறு மதியம் தனியே கடந்த கால நினைவுகளுடன் நடை பழகும் லேக் ஷோர்க்கும் வந்து விட்டேன். காதினில் IPod வழங்கும் Kenny G & Brian Adams இசையை ரசிக்க முடியவில்லை

வாழ்க்கையே பொருள் தேடுவதற்கு தான் என்று முடிவு செய்த பிறகு, அந்த பொருளை திரைகடலோடி தேடும் மனிதர்களின் கூட்டத்தில் கலந்து விட்ட ஒரு சராசரி மனிதன் நான்.பெற்றோர்கள், நண்பர்கள் எங்கோ பல ஆயிரம் மைல் தூரத்தில் இருக்க நாம் மட்டும் இங்கு வந்து சேர நேர்ந்தது எதன் பொருட்டு ? நம்மிடம் மட்டும் நிறைய பணம் (நிறைய என்பதன் இலக்கு மாறிக் கொண்டே இருப்பதால் தான் பிரச்சனை என்று நினைக்கிறேன்) இருந்திருந்தால் இங்கு வந்திருக்க நேர்ந்திருக்காதே என்ற எண்ணமும் சில நேரங்களில் தோன்றும்.

நிறைய சம்பாதித்து விட்டு சீக்கிரமாக இங்கிருந்து சென்று விட வேண்டும். இது நமக்கான தேசம் அல்ல என்றும் நினைப்பேன். இப்படியே புலம்பிக் கொண்டு பல வருடங்களாக இங்கேயே இருக்கும் சில நண்பர்களின் முகங்களும் அப்பொழுது ஞாபகத்திற்கு வரும்.அதில் எனது திருமுகம் சேர்ந்து விடுமோ என்று சில சமயம் அச்சம் கொள்கிறேன். நாம் அப்படி இருந்து விடக் கூடாது என்றும் நினைத்துக் கொள்வேன்.

கல்லூரி முடித்து விட்டு வேலை தேடும் படலத்தில் இருந்த நேரத்தில் ஒரு 5000 ரூபாய் கிடைத்தால் போதும் என்று தோன்றியது. பிறகு 20000 சம்பளம் வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டது. 65000 ரூபாய் கிடைத்த பொழுதும், அடுத்த இலக்காக 120000 வேண்டும் என்று தோன்றியது. சம்பளம் அதற்கு மேலும் பெருகிய பொழுதும் தேவைகள் மட்டும் குறையவே இல்லை. போதும் என்ற எண்ணம் மனதிற்கு தோன்றுவதே கிடையாது. இங்கு வந்த பிறகு, நான் வேலை தேடியலைந்த காலகட்டத்தில் கனவிலும் நினைத்து பார்க்காத மாத சம்பளத்தில் இந்தியாவில் வேலை கிடைத்தும் அடுத்த இலக்குகளை நோக்கி மனம் சென்று கொண்டே இருக்கிறது.

பணமும் நிறைய வேண்டும். அதுவும் சீக்கிரமாக பெற வேண்டும் ? என்ன செய்யலாம் ? ஏறு விமானத்தில், இறங்கிடு அமெரிக்க திரு நாட்டில் என்ற தத்துவம் நிலைக்க பெற்ற மென்பொருள் துறையில் நான் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன ? இதோ இங்கே வந்து சேர்ந்து விட்டேன். ஆனால் பொருள் மட்டும் தான் வாழ்க்கையா ? எனக்கு புரியவில்லை.

EAI சம்பந்தமான வேலையில் இருப்பதால் இரவில் நம்மதியாக தூங்க கூட முடிவதில்லை. எந்த பிரச்சனை என்றாலும் உடனே கைகாட்டுவது ESB, EAI Bus ல எதோ Messaging , Pub/ Sub பிரச்சனை என்றுதான்.. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று சொல்லுவது போல ஆகி விட்டது என்னுடைய கதை.சில வாரங்களுக்கு முன் நண்பர்களுடன் லாங் டிரைவ் சென்று, பழங்கதை பேசி சந்தோசமாக வேளையில் கடையில் இருந்து சர்வர்ல ஞாபகம் உடைந்துவிட்டது என்று பீப், மற்றும் தொலைபேசி அழைப்பு. போட்ட திட்டம் எல்லாம் அம்பேல். நண்பர்களிடம் வசவு வேறு.வாழ்க்கையா இது ?

காலேஜில் இருந்த போது ராக்கோழியாக இருக்க ஆரம்பித்து, பழகிய இந்த பழக்கம் வேலைக்கு சென்ற காலகட்டத்தில் அதிகம் ஆகியது. எனது நெருங்கிய கூட்டாளிகளே என்னுடன் ஒரு டீம் ஆக இருக்கும்போது வேலை செய்வதோ, நேரம் போவதோ தெரியாது.எனென்றால் எனக்கு நண்பர்களை தவிர்த்து தனிபட்ட வாழ்க்கை என்று ஒன்றும் கிடையாது. அல்லது கிடைத்தவைகளை கண்டுகொள்ள எனக்கு தெரியவில்லை. இதற்காக நான் வருத்தபட்டது கிடையாது.

பெங்களூரில் 10 மணி வரைக்கும் நன்றாக தூங்கி, 11 மணிக்ககுள் அலுவலக கான்டீன் சென்று ஒரு ஹெவியான காலை உணவு முடித்து விட்டு, ஒரு ஜூஸ்சை கையில் பிடித்துகொண்டு டெஸ்க்ல போய் லேப்டாப் திறந்து அமர்ந்தால் நாள் ஆரம்பிக்கும். வந்த மெயில்களுக்கு பொறுப்பான பதில் அனுப்பிவிட்டு, பக்கத்து டெஸ்க்ல இருந்து கொண்டு IM செய்ய பிடிக்காமல் எனது AP, UP நண்பர்களிடம் சென்று அவனது முந்தைய நாள் முன்னிரவு பெண்களூர் கதையை சிறிது நேரம் கேட்டுவிட்டு, லேப்டாப்ல தலைய விட்டா சாயந்தரம் ஒரு 5.30 மணிக்கு ஒரு பெல் அடிக்கும். கேன்டீன்ல போய் 2 சிக்கன் சான்ட்விச் ஒரு ஜூஸ். இன்னுமொரு ஜூஸ்சை கையில் எந்திகொண்டு கீழே இருக்கும் அலுவகல பார்க்குக்கு சென்றால் அங்கு எனது கூட்டாளிகள் ஆஜர். அங்கு வைத்து அலுவகத்தில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இது என்பது போன்ற சீரியஸ் கருத்தரங்குகள். புகை விடும் நண்பர்கள் சாக்கில் அலுவலக எதிரில் உள்ள டீக்கடையில் அமர்ந்து யார் யாருடன் செல்கிறார்கள் இல்லை, யார் யாருடைய ஸ்கூட்டிக்கு பின்னால் செல்கிறார்கள் என்ற டேட்டா அனலிடிக்ஸ். சபை கலைந்து மறுபடியும் லேப்டாப்ல தலைய விட்டா ஒரு 11 மணி போல அவுட் டூ டின்னர் ந்னு IM ஸ்டேட்டஸ் வச்சிட்டு கேன்டீன்ல போய் ஒரு பாத்தி கட்டி விவசாயம் பாத்துட்டு, காலை ஒரு 4.30 மணி வரைக்கும் வேலை. வாரக்கடைசி ஆனால் மதுரை பயணம், 2 நாள் அம்மாவின் அருகாமை, கோவில்கள், சிறிது ஓய்வு, சொந்த ஊரிலே இருக்கும் தோழர்களுடன் அரட்டை, என்று சுகமாக இருந்த வாழ்க்கை ஏனோ ஞாபகத்தில் வந்து போகிறது.


தமிழ் புத்தாண்டு, விஷு கனி போன்ற நன்னாளில் வீட்டுக்கு தொலை பேசினால், அம்மா இங்க நீ இல்லாம எனக்கு ஒரு மாதிரி இருக்குடா.. உம் முகத்தை பார்த்து நாள் ஆச்சிடா.. ஒரு படமாவது அனுப்புனா என்னடா ?. அப்படி என்னதான் வேலையோ எனக்கு தெரியல ? நீ எப்படிடா அங்க தனியா சமாளிக்கிற ? உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லயா என்று கவலையுடன் பேசும் பொழுது கண்ணீர் எட்டி பார்க்கத் தான் செய்கிறது ? . 1 மணி நேரம் பேசினால் தான் மனம் ஆறுதல் அடைகிறது. அதே நினைவில் சிறிது நேரம் ஆழ்ந்து விட்டு எழுந்தால் மனதை ஏதோ பாரம் அழுத்துகிறது. ஆனாலும் பொருளை தேடி ஓடும் வாழ்க்கை ஓட்டத்தில் இதனை எல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை. அம்மாவின் முகம் நினைவில் வந்து போகிறது. எப்பொழுது இந்தியாவுக்கு திரும்பிச்செல்வேன் ? என்ற எனது அடிமனதின் கேள்விக்கு பதில் தேடி களைத்து போய்விட்டேன்..

நாட்கள் மெதுவாக நகருவது போன்ற பிரமை. சில சமயம் வாழ்வின் பொருள் என்ன ? வாழ்க்கையில் எதை நோக்கி ஓடுகிறேன் ? எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறேன் ? இன்னும் எவ்வளவு தூரம் ?

ஒவ்வொருவர் வாழ்விலும் பொருள் குறித்து பல்வேறு தேவைகள். அதற்காக சில சமரசங்களை செய்ய கொள்ள வேண்டிய நிலை. சுகங்களை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்றிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காதே என்ற எண்ணம் தோன்றத் தான் செய்கிறது.

ம்.ம்.ம் என்ன செய்ய ?

34 Comments:

Blogger துளசி கோபால் said...

கார்த்திக்,
உங்க மன உளைச்சல் புரியுது. இப்ப நீங்க பேச்சு இல்லாதவரா இருக்கறதாலேதான் இதெல்லாம்
உங்களுக்குப் பூதாகரமாத் தெரியுது.

நாளைக்கே 'குடும்பி' ஆயிட்டா இந்தப் பொருளைப்பத்தின கண்ணோட்டம் வேறமாதிரி இருக்கும்.
வள்ளுவரே சொல்லிட்டாரய்யா, 'பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகமில்லை'ன்னு.
பத்திரம். அவ்வளவுதான் சொல்லமுடியும், ஆமா....

4/17/2006 04:49:00 PM  
Anonymous Anonymous said...

பேசாம கால்கரிக்கு போய்டுங்க சார் :)

4/17/2006 04:54:00 PM  
Blogger Karthik Jayanth said...

துளசி அம்மா,

//'பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகமில்லை'ன்னு. பத்திரம்.

என்னமோ நீங்க சொல்றிங்க.. பெரியவங்க சொன்ன சரியாத்தான் இருக்கும். உங்க பேச்சை கேட்டு பத்திரமா இருக்க பாக்குறேன்.. எவ்வளவுதான் நான் வேறு விசயங்களில் என்னை ஈடுபடுத்திகொண்டாலும் அடிமனதில் எழும் அந்த வெறுமையான தருணங்களையும், உணர்வுகளையும் தவிர்க்க இயலவில்லை :-(

4/17/2006 05:04:00 PM  
Blogger Karthik Jayanth said...

துளசி அம்மா,

//'குடும்பி' ஆயிட்டா இந்தப் பொருளைப்பத்தின கண்ணோட்டம் வேறமாதிரி..

இந்த மாதிரி சப்பை பிரச்சனைக்கு எல்லாம் சோர்ந்து போய் விடாத படி இன்னும் பெரிய பிரச்சனைகள் வந்து தலைமேல ரெடியா இருக்கும்ன்னு சொல்லுறிங்களா :-)

4/17/2006 05:08:00 PM  
Blogger Karthik Jayanth said...

அய்யா அனானி,

தங்களின் அலோசனைக்கு மிக்க நன்றி.. அப்படி என்னதான் இருக்கு கால்கரில ?. என்ன மாதிரி நிறைய பேரு அங்க இருக்குறாங்களா ?. இல்ல அங்க போனா இந்த பிரச்சனை எல்லாம் சரியாகிடுமா ?

எனக்கு தெரிந்து அந்த ஊர்ல மூத்த வலைபதிவர் எங்க ஊரை சேர்ந்த கால்கரி சிவா சார்தான் இருக்குறார்.

4/17/2006 05:15:00 PM  
Blogger துளசி கோபால் said...

கார்த்திக்,

//எவ்வளவுதான் நான் வேறு விசயங்களில் என்னை ஈடுபடுத்திகொண்டாலும்
அடிமனதில் எழும் அந்த வெறுமையான தருணங்களையும்,
உணர்வுகளையும் தவிர்க்க இயலவில்லை :-(//

இந்த எண்ணம் இல்லாதவங்க நம்ம ஊர்லே இருக்காங்களா என்ன? மனிதர்கள் எல்லாரும் அடிப்படையிலே
ஒண்ணுதான். 100% திருப்தியா இருக்கற ஒரு மனுஷனைக் காட்டுங்க பார்ப்போம், அது எந்த நாடா இருந்தாலும் சரி.

எல்லாம் ஒரு தேடல்தான். எல்லாம் இருந்தும் ஒண்ணும் இல்லாமலும், (ஒண்ணும் இல்லாமலேயே எல்லாம் இருக்கற
எண்ணமும்...அட, ரெண்டும் ஒண்ணுதானோ?) ஒண்ணுமட்டும் இருந்து வேற எதுவுமே இல்லாமலும்னு.....

சரி சரி. அம்மாவோட விலாசமோ ஃபோன் # கொடுங்க. கால்கட்டுக்கு ஏற்பாடு செஞ்சுறச் சொல்லிறலாம், என்ன:-)

4/17/2006 06:07:00 PM  
Blogger Karthik Jayanth said...

துளசி அம்மா

//100% திருப்தியா இருக்கற ஒரு மனுஷனைக்..எல்லாம் ஒரு தேடல்தான்..

நீங்க சொல்லுறது ரொம்ப சரிதான்.. இதுக்காக கால்கட்டு எல்லாம் வேணாம் :-)

கொஞ்ச நாள் எதோ Cross country trip & Europe tour ந்னு வாழ்க்கையின் வசந்த காலத்தை அனுபவிச்சிகிறேன் :-)

வீட்டுலயும் ஆடு எப்படா பிரியாணிக்கு சிக்கும்ன்னு மசாலாவோட வெய்டிங்.

முந்தியாவது நாங்க ஏழு பேரு. எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் போவோம்,எங்களுக்கு பயமே கிடையாதுன்னு வீர வசனம் பேசிகிட்டு இருந்தோம்..

திடுதிப்புன்னு அதுல பல ஆடுகள் மந்தையிலிருந்து காணாமல் போயிடிச்சி :-). இப்ப மிச்சம் இருக்குறது 3 பேருதான்.. அதுல ஒருத்தன் மேல எங்க 2 பேருக்கு சந்தேகம்தான். எனக்கே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு :-(, இருந்தாலும் வெளிய சொல்லிகிறது இல்ல :-)

இப்படி இருக்கு கதை.

4/17/2006 07:10:00 PM  
Blogger கவிதா | Kavitha said...

webcam மூலம் அம்மாவுடன் தினம் ஒரு முறையாவது பேசுங்கள், (அவருக்கு கற்றுகொடுத்து விடுங்கள்) முடிந்தால்..அம்மாவை உங்களுடன் அழைத்து செல்லுங்கள். போதும் என்று நினைக்க பழகுங்கள், உங்களின் இந்த வெறுமைக்கு முற்று புள்ளி வந்துவிடும்.

4/18/2006 01:49:00 AM  
Blogger குமரன் (Kumaran) said...

கார்த்திக்கு...இம்புட்டு நேரம் கழிச்சு வந்தா இது தான். எனக்கு முன்னாடியே நான் சொல்ல நினைச்சத எல்லாம் மத்தவங்க சொல்லிட்டுப் போயிட்டாங்க. :-) நான் முக்கியமா சொல்ல நினைச்சதை துளசி அக்கா சொல்லியிருக்காங்க. சீக்கிரம் கண்ணாலம் கட்டிக்கோங்க. எல்லாம் சரியாப் போயிடும்.

4/18/2006 09:40:00 AM  
Blogger Karthik Jayanth said...

ராஜசேகர் அய்யா,

// 15 வருடங்களுக்கு முன்பு உங்கள் நிலையிலிருந்த நான் எனக்கென்று கண்டு கொண்ட பொருளையும், பதிலையும் இங்கே விவரித்துள்ளேன்..

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..உங்கள் பதிவில் கூறியுள்ளது போல் சில தெளிவான தீர்க்கமான சிந்தனைகள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.. ' Distance gives a clear vision 'என்று ஆங்கிலத்தில் கூறுவது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்பதை நான் உணர்ந்துளேன்.

தாங்களின் பதிவில் கூறியது போல் எனது வாழ்க்கையின் லட்சியமான சில எண்ணங்களை அடைய, சில வரையறுக்கபட்ட குறிக்கோள்களின் மூலம் எட்ட முயர்ச்சித்து கொண்டு இருக்கிறேன்.

// "உணர்ச்சி என்பது வேண்டும்"...// சிறிது அதிகமாக உள்ளதால்தான் உங்களுக்கு இந்த 'டிலைமா'

மனிதன் சதைகளின் உருவமாக மட்டும் இல்லாமல், சில சந்தர்பங்களில் உணர்ச்சிகளின் குவியலாகவும் மாறிவிடுகிறான்.

அந்த தருணங்களில் மனதில் எழும் சிந்தனை ஓட்டங்கள்தான் எத்தனை ? எத்தனை ? வாழ்வின் லட்சியத்தையே புரட்டிபோட்டு விடும் வல்லமை வாய்ந்தவை அந்த தருணங்கள்.

தங்களுக்கு ஒரு மெயில் அனுப்ப முயன்றேன் பவுன்ஸ் ஆகிவிட்டது. இந்த கமென்ட்டை பார்த்தால் உங்களின் மெயில் அனுப்பவும்.

4/18/2006 11:28:00 AM  
Blogger Karthik Jayanth said...

கவிதா,

//முடிந்தால்..அம்மாவை உங்களுடன் அழைத்து செல்லுங்கள்.

வீட்டில் இருப்பவர்களுக்கு இங்கு வருவதில் நாட்டம் இல்லை.

//போதும் என்று நினைக்க பழகுங்கள்..

ம்.ம்.ம்... பெரிய பெரிய ஞானிகள் அடைய நினைத்தது.. நானோ சிறுவன். இருந்தாலும் முயர்ச்சிகிறேன்.. Great journey begins with small steps சரிதானே :-)

4/18/2006 01:03:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

கார்த்திக்கு, கழக மானத்தை காப்பாத்து.. வந்து கொத்தனாருக்கு பதில் சொல்லு:)


http://poonspakkangkal.blogspot.com/2006/04/blog-post_114545356540684801.html

4/20/2006 05:42:00 AM  
Blogger Santhosh said...

பாத்தியா கார்த்திக் நான் ரொம்ப நாளுக்கு முன்னாடி சொன்னதை தான் பெரியவங்க துளசி அக்காவும், குமரனும் செல்லி இருக்காங்க. பாத்து காலாகாலத்துல கண்ணாலம் பண்ணிக்கோப்பா. :))

4/20/2006 11:33:00 AM  
Anonymous Anonymous said...

உங்களை போல் தான், என்னுடைய முதல் வேலையில் டெல்லியிலிருந்தபொளுது தமிழ்நாட்டை பார்த்து ஏங்குவதுண்டு, இப்பெல்லம், என் பெண், நீங்க வேனா போங்கங்கிறா!

4/20/2006 01:28:00 PM  
Blogger Karthik Jayanth said...

அய்யா சந்தோஷ்,

எதோ பணத்துக்காக இந்த ஊருக்கு வந்தேன். அதில இருக்குற இம்சை பத்தாதுன்னு இது வேறயா. இங்க தனி ஒருத்தனாகவே கதை கந்தல் கோலமா இருக்கு :-).

In Lighter Sense

என்னமோ நீங்க எல்லாம் சொல்லுறத பாத்தா கல்யாணம்தான் வாழ்கையின் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வுன்னு சொல்லுற மாதிரி இருக்கு :-)).

இதுல உள்/வெளி/சைடு/கீழ்/மேல் குத்து எதுவும் இல்ல.

4/20/2006 01:54:00 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

கார்த்திக்,

அதிகம் சங்கீதம் கேளுங்கள். அதுவும் கிளாஸ்சிகல் சங்கீதமாக இருந்தால் மேல். நீங்கள், லேக் ஷோரில் அமர்ந்து இதனை ரசித்தீர்களானால் பெரும் நிம்மதி தரும்.

சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அது ஒரு நல்ல பொழுது போக்கு.

முடிந்த வரை தனிமையைத் தவிர்த்திடுங்கள். எனக்கு சிகாகோவில் நண்பர்கள் உண்டு. வேண்டுமென்றால் அறிமுகம் செய்து வைக்கின்றேன்.

இல்லையென்றால் இருக்கவே இருக்கு தமிழ்மணம். வாருங்கள் கதைக்கலாம்.

4/20/2006 02:07:00 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//என்னமோ நீங்க எல்லாம் சொல்லுறத பாத்தா கல்யாணம்தான் வாழ்கையின் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வுன்னு சொல்லுற மாதிரி இருக்கு :-)). //

ஒரு கோடை, அதைட்த் தொடாமல் சிறிதாக்க என்ன வழி?

:)

4/20/2006 02:08:00 PM  
Blogger Karthik Jayanth said...

அனானி சார்,

//என் பெண், நீங்க வேனா போங்கங்கிறா! //

நமக்கு எப்படி த.நா உயிர் மூச்சோ அதே மாதிரி அவங்களுக்கு (அடுத்த தலைமுறை) அந்த ஊர்தான் போல. இந்த மனபோக்கை இங்கு உள்ள 2-ம் தலைமுறை இந்தியர்களிடம் பார்த்திருக்கிறேன்.

அய்யா கொத்ஸ்,

//அதைட்த் தொடாமல் சிறிதாக்க என்ன வழி? //

வாழ்க்கைய கொத்து பரோட்டா ஆகிடுவீங்க போலயே :-).
எற்கனவே மந்தையில் இருந்து தப்பிச்ச ஆடு மாதிரி முழிச்சிக்கிட்டு இருக்குறேன்.

4/20/2006 02:43:00 PM  
Blogger துளசி கோபால் said...

கொத்ஸ்,

சரியாச் சொல்லீட்டே நைனா. எல்லாம் இருகோடுகள் தத்துவமுன்னு இந்த கார்த்திக்குக்கு யாரானும் தெளிவாச் சொல்லுங்களேன்பா.

அப்புறம் கவலைப்பட 'தனி நேரம்' தேவைப்படாது:-)))))

4/20/2006 03:14:00 PM  
Blogger Karthik Jayanth said...

அய்யா கொத்ஸ்,

இந்த கமென்ட்டை எப்படியே மிஸ் செய்த்துட்டேன். மன்னியுங்கள். இவ்வளவு சிரத்தையுடன் அறிவுரைகளை வழங்கும் நண்பர்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி..

//சங்கீதம் கேளுங்கள்.. சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

இப்ப வாழ்க்கை இப்படிதான் போகுது. சமையல் முயர்ச்சிக்கிறேன் :-)

//தனிமையைத் தவிர்த்திடுங்கள்..

நான் அடிப்படையில் புதியவர்களுடன் வெகு சிக்கிரம் பழகமாட்டேன் மாற்றிகொள்ள முயல்கிறேன். புதிய நண்பர்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

//இல்லையென்றால் இருக்கவே இருக்கு தமிழ்மணம். வாருங்கள் கதைக்கலாம்.

இப்ப என்ன பண்ணுறேன் :-) ஜோதில சேர்ந்து ஒரே கொசுவத்தியா சுத்துறேன் :-)

4/20/2006 03:57:00 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//ஜோதில சேர்ந்து ஒரே கொசுவத்தியா சுத்துறேன் :-)//

இன்னுமொரு பெரிய ஜோதி ஒண்ணு இருக்கே, அதில் சேருங்க. நல்ல பொருப்பா பார்த்து தரோம். அப்புறம் பாருங்க. டையமே இருக்காது. என்ன சொல்லறீங்க?

4/20/2006 04:31:00 PM  
Blogger Karthik Jayanth said...

துளசி அம்மா,

இப்படி கோடா போட்டா பிரச்சனை இடியாப்ப சிக்கல்லா இல்ல ஆகிடும்.

கொத்ஸ்,

//இன்னுமொரு பெரிய ஜோதி ஒண்ணு இருக்கே, அதில் சேருங்க. நல்ல பொருப்பா பார்த்து தரோம்.

நீங்க எந்த ஜோதிய சொல்றிங்க ?. எதோ நல்ல கொடகூலி கிடைச்சா சரிதான் :-)

4/20/2006 04:38:00 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//நீங்க எந்த ஜோதிய சொல்றிங்க ?//

நான் சொல்லறது எந்த ஜோதின்னு புரியலையா? வேணும்னா துளசி கோபால் (கொ.ப.செ, நியூசிலாந்து) அவர்களைக் கேட்டுப் பாருங்களே.

இப்படிக்கு
இ.கோ
(கொ.ப.ச., வட அமெரிக்கா- கிழக்கு)

4/20/2006 05:57:00 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//எதோ நல்ல கொடகூலி கிடைச்சா சரிதான் :-)//

சேரரதுக்கு முன்னாடியே 25 வர மாதிரி பண்ணறோம். சேர்ந்தா எப்படி ஓடும்ன்னு யோசிச்சு பாருங்க.

4/20/2006 05:59:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

கூட்டாளி கார்த்திக்.. கழக மானத்தக் காப்பாத்த சொன்னா, கொத்தனாரோட குந்திகினு கட்சி மாறரீரோ...

(ஆகா எவ்வளவு 'க'!! கொத்ஸ், இந்த மோனை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா??!!)

ஒழுங்கா வந்து, உங்க பதிவப் பத்தின கம்ப்ளெயிண்டுக்கு பதில் சொல்லுங்க.. இல்லைன்னா கட்சி தன் ஒழுங்கு நடவடிக்கையை ஆரம்பிச்சிடும்..ஆமாம் சொல்லிட்டேன்...

தேவ், கார்த்திக்கு ஒரு தொகுதி சீக்கிரமா ஒதுக்கு.. அப்பால வருத்தப்படக் கூடாது

கார்த்திக், இருபத்தஞ்சு பெரிசா இருபத்தாறு பெரிசா??

4/20/2006 08:02:00 PM  
Blogger Karthik Jayanth said...

சங்கத்தின் செயல் சுனாமி பொன்ஸ் அவர்களே,

ஒரு கொடியில் பூத்த இரு பாச மலர்கள் நாம், இதில் பிரிவேது. இந்த அன்பு தம்பியின் உள்ளத்தை நன்கு அறிந்தவர்கள் நீங்கள்.

//தமிழ் ஒரு விந்தையான மொழி.. அதனால் தான் உங்களுக்கு அப்படித் தோணி இருக்கோ??

நீங்கள் கொடுத்த விளக்க அறிக்கையையே நான் வழிமொழிகிறேன். கொத்ஸ் அவர்கள் எழுதிய அறிக்கையை பார்த்தேன். படித்தேன்.

இதனை இந்த உ.தா கொண்டு விளக்க முனைகிறேன்.

போர்களத்தில் தளபதி ஆற்றும் உரை ஒன்றுதான் அதர்மம் அழிய, தர்மம் நிலைக்க வெற்றிவேல் !! வீரவேல் !! .இதனை ஒரு மொழியில் எவ்வாறு வேறு வார்த்தைகளை கொண்டு சொல்ல முடியும்.. இந்த வார்த்தைகளைத்தான் சூரபதுமனை சூல் கொண்டு அழித்த எம்பெருமான் முருக கடவுள் சொன்னது, கண்ணன் அர்ஜுனனுக்கு சொன்னதும் இதுதான்.

உலகின் தலை சிறந்த வீரர்களை எடுத்து கொண்டால், போர்முனையில் வெற்றி ஒன்றையே வேண்டிய மாவீரன் அலெக்ஸாண்டர் சொன்னது, மக்கள் புரட்சி மூலம் உலகில் புதிய சரித்திரதை எழுதிய லெனின், சேகுவேரா என ஒரு மொழி வார்த்தையில் சொன்னால் ஒன்றுதான். ஒரு பொருள் வார்த்தையை சீர்/ மோர்/ பீர் எனவும், எதுகை/ இடக்கை/ வலக்கை/ உலக்கை/ மோனை எனவும், அடி உதை எனவும், ஒரு வார்த்தையை நான் சொன்னேன் அவன் என்னை பார்த்து படிக்கிறான் / பதிவை இடிக்கிறான் என்று சொல்ல நான் ஒன்றும் இலக்கிய பித்தன் அல்லவே.களத்தில் வெற்றி ஒன்றையே விரும்பும் வீர தளபதி நான்.

நிலா அவர்கள் நடத்திய தேர்தலில் ஆன்மிக உலகின் ஆழ்கடல் (ரிஜீஸ்டர்டு), பல பதிவுகளின் பன் முக நாயகன், தகவல் சுரங்கம், உள்/ வெளி/ சைடு/ மேல்/ கீழ் குத்து என எதுவும் இல்லாமல் நேரடியாக செய்திகளை சுருங்க கூறும் கருத்து கந்தசாமி, இணைய உலகுக்கு கோனார் நோட்ஸ் போட்ட பெரும் தலைவன், வழி தவறுவோர்க்கு கலங்கரை விளக்கு, அரவணைத்து நல்வழி காட்டும் அன்பு செம்மல், மதுரை தந்த மண்ணின் மைந்தன் அண்ணன் குமரன் அவர்களின் சூறாவளி பிரச்சாரத்தில்தான் வரலாறு காணாத வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் இவர்களோ பழம்பெருமை மட்டுமே பேசி, இப்படி சரித்திரத்தை திசை திருப்பும் முயர்ச்சியிலும் இறங்கி இருப்பதுதான் இதில் விந்தையான விசயம்.

4/20/2006 09:11:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

அப்படி போடு அருவாளை.. அக்கா குடுத்த டிப்ஸ பிடிச்சிகிட்டு நீதான் பேராசிரியர் நம் 2ன்னு நிருபிச்சிட்டியே தம்பி..

ஒரு கொடியில், இரு மலர்கள் பூத்ததம்மா...

ஒரே பீலிங்க்ஸா போச்சு கூட்டாளி.. இன்னிக்கின்னு பார்த்து நான் கர்ச்சீப் எடுத்து வரல.. சரி விடு.. எதுக்கு இருக்கு இம்மாம் பெரிசா துப்பட்டா.. ஆல் பர்பஸ் தான்..ஐ ஆம் தி அட்ஜஸ்ட்...

4/20/2006 11:07:00 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

தேவக்காணம்.. வந்ததும் தொகுதி ஒதுக்க சொல்றேன்..

4/20/2006 11:07:00 PM  
Blogger Mahadev said...

Hi all ,
I'm also Karthi from Tiruchendur , very young member to Software Industry and tamil blog ..

I'm very happy to read tamil here in blog . This will make me to write in tamil .

Please tell me how to write in Tamil in blog ..

Mikka Nadri ..
Anbudan
Karthi

4/22/2006 01:03:00 AM  
Blogger Karthik Jayanth said...

வாங்க கார்த்தி,

முதல் வரவு.. நல் வரவு ஆகுக..

எதோ இந்த ஊர் வந்ததுக்கு அப்புறம் தமிழ் மறந்து விடக்கூடாதுன்னு இப்படி எல்லாத்தையும் கொன்னுகிட்டு இருக்கேன் :-)

பெரியவங்க சொல்லாததையா நான் சொல்ல போறேன். இ-கலப்பை ய இடுங்க. தமிழ் வயல் ல நாத்து நட்டு, புகழ் பெறுங்க :-)

4/22/2006 01:14:00 AM  
Blogger Mahadev said...

Thayavu cheithu ,
tell me how to write in tamil

please tell me in English :)

4/22/2006 01:20:00 AM  
Blogger Karthik Jayanth said...

அய்யா கார்த்தி,

அசுரனை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய எம்பெருமான் தமிழ் கடவுள் முருகன் குடிகொண்டுள்ள அறுபடை வீட்டில் ஒன்றான திருச்செந்தூர் ல இருந்து வந்துட்டு இப்படி பீட்டர் பாண்டியா இருக்குறயே அய்யா.

சும்மா அப்படியே கூகுள் ல தமிழ் இ-கலப்பை பான்ட் டவுன்லோட்ன்னு போட்டு தேடுப்பு. அப்படியே தமிழ்மண்த்துல கொஞ்சம் மேச்சி பாரு :-)

Happy hunting

4/22/2006 01:28:00 AM  
Blogger Mahadev said...

கார்த்தி அண்னே , ஏப்படியொ தேடி கண்டுபிடிச்சிட்டேன்.. ரொம்ப ரொம்ப நன்றி .
அன்புடன்,
கார்த்தி
திருச்செந்தூர்

4/22/2006 02:54:00 AM  
Blogger Mahadev said...

அண்ணா ..
என்னோட ப்லொக் முகவரி.

http://mkarthikeya.blogspot.com/

4/22/2006 03:32:00 AM  

Post a Comment

<< Home